வானொலி நாடகங்களை கேட்டுவிட்டு முத்தமிழில் மூன்றாவதாக ஏன்நாடகங்களை சேத்தார்கள் என்று வியந்து கொண்டு இருந்தபோது எங்களூர் (குரும்பசிட்டி) சன்மார்க்கசபையில் (சனசமூக நிலையம்) தாளலய நாடகங்களை கொண்டுவந்து அரங்கேற்றி நாடகம் என்றாலே புதுவிளக்கம் கொடுத்தவர் ஏ ரி பொன்னுத்துரை அவர்கள்.
இவர் நடித்த பொறுத்தது போதும் நாடகம் (திரு தாஸீஸியஸ் இயக்கியது?) விடியவிடிய பார்த்துவிட்டு ”வந்திட்டு வந்திட்டு போறியோ மச்சான்” என்று முணுமுணுத்தது 25 வருடங்களுககு முன் என்றாலும் இப்போ நடந்தது போல் கண்ணுககுள் நிற்கிறது. அப்போது நாங்கள் சிறுவர்கள் ஆதலால் கடற்கரைப்பக்கம் அதிகம் விடமாட்டார்கள். இந்த நாடகத்தின் மூலமே மீன்பிடித் தொழிலின் முறை தலைகளை அறிந்து கொண்டேன். அதன் பிறகு சிறிது காலத்தால்பொன்னுத்துரை அவர்கள் நடித்த இன்னுமொரு நாடகம் (திரு சங்காரம்?) வாயிலாக மனித மனங்களை போட்டு ஆட்டும் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகியவை பற்றிய அறிவும் கிடைத்தது.
இந்த நாடகங்களின் தாக்கத்தாலேயே நாடகம் பழகவேண்டும் என்ற ஆவல்ஏற்பட நானும் இன்னும் சில தோழர்களும் சன்மார்க்கசபையின் பின்புறத்தேஇருந்த கட்டிடத்தில் பொன்னுத்துரை அவர்களிடம் நாடகம் பழகினோம். நாட்டுபிரச்சனைகள் காரணமாக இடையில் நின்று விட்டது. ஆனாலும் பிற்குவாழ்க்கையில் நடிக்க அது உதவிற்று.
நீங்கள் தாளலய நாடகங்கள் பாத்திருக்கிறீர்களா? நாடகத் தமிழின் சுவையைஉணர்ந்திருக்கிறீர்களா? எங்களூர் பொன்னுத்துரையை தெரியுமா?
நாடகத்துறையில் பல சாதனைகளை நிலைநாட்டிய கலைப்பேரரசை நினைவு கூர்வது காலத்தின் தேவையாகும் - செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன்
"கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை சிறுவயது முதல் நாடகத்துறையில் அதிக ஈடுபாடுகொண்டு பல சாதனைகளை நிலைநாட்டியவர். அவரால் எழுதப்பட்ட பல நாடகங்கள் அவரது ஆற்றலை மக்களுக்கு எடுத்தியம்பின, நாடகங்களில் சிரிப்பும் சிந்தனையும் இருந்தால்தான் அதனை மக்கள் இரசிப்பார்கள் எனக் கூறும் கலைப் பேரரசால் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் அவரே முக்கிய பாத்திரங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டினார். அவரது நடிப்பால் தாளக்கட்டும், ஓசைநயமும் உச்சரிப்புத் தெளிவும் இருக்கும். எப்போதும் நடிப்பு குரலிலும் தெரிய வேண்டும் என கூறுபவரும் அவரேதான்'
இவ்வாறு, கலைப் பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை நினைவு விருது வழங்கும் வைபவத்தில், சிறப்புரையாற்றிய தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கா தேவஸ்தான தலைவரும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி அதிபருமான செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.
இவ்விருது வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதின மண்டபத்தில் யாழ்.இலக்கிய வட்டத்தலைவர் கலாநிதி கே.குணராசா தலைமையில் நடைபெற்றது. வைபவத்தில், இவ்வாண்டுக்கான கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை விருது, சிறந்த வில்லுப்பாட்டுக் கலைஞர் கலாபூசணம் சின்னமணி க.நா.கணபதிப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. விருதினை பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை வழங்கிக் கௌரவித்தார்.
ஆறு. திருமுருகன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
கலைப்பேரரசு தமிழ்நாடு கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ராகி மைடியர் நாடகத்தை மேடையேற்றி நடித்துப் பாராட்டப்பட்டவர். அவர் இந்தியாவில் படித்த காலத்தில் குவேனி, முதலாளி, தொழிலாளி போன்ற நாடகங்களும் அவரால் மேடையேற்றப்பட்டன. சிறுவயதில் அவரது நாடக ஈடுபாடு பின்னைய காலங்களில் அவரை ஒரு நல்ல கலைஞனாக அடையாளப்படுத்தின. ஈழத்தின் நாடகக் கலைஞர் கே.கே.வி.செல்லையாவுடன் இணைந்து மேடையேற்றி நாட்டாமை நாகம்மா, அல்லி அர்ச்சுனா போன்ற நாடகங்களும் வசாவிளான் மகாவித்தியாலயத்தில் மேடையேற்றப்பட்ட பக்த துருவன், உலோபியின் காதல், விதியின் சதி ஆகிய நாடகங்களும் மேடையேற்றப்பட்ட போது கலைப் பேரரசின் நடிப்பாற்றலை எல்லோரும் அறிந்து கொண்டனர்.
அவரை ஒரு சிறந்த நடிகராக வெளியுலகுக்கு அறிமுகம் செய்த நாடகம் தாளக் காவடி பக்திக் கூத்தாகும், இதனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதன் முதலில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியது. கந்தபுராண கலாசாரத்தின் தனித்துவ சின்னமாக நேர்த்திக்கடன் முழுபக்திக்கூத்தாக அன்றைய காலகட்டத்தில் பிரபல்யமாக இருந்தது. இந்நாடகம் பின்னர் மாவட்டபுரம் கந்தசாமி கோவில் உற்சவகாலத்திலும் வெளியிடங்களிலும் மேடையேற்றப்பட்டு சிறந்த கலைஞராக அவர் பரிணாமம் அடைந்தார். அவரது 25 வருட கலையுலக வாழ்வைப் பாராட்டி குரும்பசிட்டி சன்மார்க்க சபை ஏற்பாடு செய்த விழாவிலே கலைப்பேரரசு பொன்னுத்துரை பெரிதும் நேசிக்கும் கலையரசு சொர்ணலிங்கத்தால் கலைப்பேரரசு பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இத்தனை பெருமைக்குரியவரான கலைப் பேரரசை நாம் நினைவு கூருகின்றோமானால் அதுகாலத்தின் தேவையாகவுள்ளது, அவரது மறைவு காலத்தின் நியதியாக கருதினாலும், அவரை நினைவு கூர்ந்து வருடாவருடம் வாழும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது நாம் கலைத்தாய்க்குச் செய்யும் பெரும் பேறாகும். பண்பாட்டு விழுமியங்களை பேணும் கலைஞர்களை நாம் கௌரவிப்பது எமது சமுதாயக் கடமையாகுமென்றார்.
தலைமையுரையாற்றிய கலாநிதி கே.குணராசா தமது உரையில்,
கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை, நாடகத்துறையில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தாரோ அந்தளவிற்கு ஈழத்து இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிந்தார். அவர் மாத்தளையில் புனித தோமையார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மாத்தளை இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி ஈழத்து இலக்கியப் பரப்பில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். பின் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணியாற்றும் போதே யாழ். இலக்கிய வட்டத்தை, கனக செந்திநாதன், ஈழவாணன் போன்ற ஈழத்து தமிழ் இலக்கியகர்த்தாக்களை இணைத்து உருவாக்கினார். அவரது பெருமுயற்சி இன்று யாழ்.இலக்கிய வட்டத்தை பெருவிருட்சமாக உருவாக்கியுள்ளது. அவரது நாடக வாண்மை சகலராலும் போற்றப்பட்டது, அவர் முத்தமிழுக்கும் பெரும் பணியாற்றியுள்ளார் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. அத்தகையவரை நினைவுகூர்ந்து வருடா வருடம் நம்வாழும் கலைஞர்களை கௌரவிப்பது பெரும் சிறப்பாகும் என்றார்.
வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை உரையாற்றுகையில்; ஏ.ரி.பொன்னுத்துரை இயல்பாகவே எல்லோருடனும் இனிமையாகப் பழகுவர். அவர் பேசும் போது எப்போதும் நாடகத்துறையில் புதிய யுக்திகளை பழைமை மாறாது புகுத்த வேண்டுமெனவே பேசுவார், பேசும் போதே ஒரு நல்ல கலைஞனாக மாறிவிடுவார். அவர் நடித்த நாடகங்கள் மக்கள் மனதை கவர்ந்தமைக்கு அவரது நடிப்புத்தான் காரணம், நாடக உலகில் அவர் பதித்த தனித்துவ முத்திரையை எவரும் அழித்துவிட முடியாது. அவர் எப்போதும் நிறுவன ரீதியாகவே தன் ஆற்றலை வெளிப்படுத்துபவர். அவரால் மேடையேற்றப்பட்ட விதியின் சதி நாடகத்தில் முதன் முதலில் பெண்பாத்திரத்தை பெண் தான் நடிக்க வேண்டுமென புரட்சி செய்து செயல்படுத்திய பெருமைக்குரியவர்.
தமிழர் பண்பாட்டியலில், நாடகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.அந்த வகையில் கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரையும் நாடகக்கலை மேம்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித்த கலைஞனாக வரலாற்றில் இடம்கொண்டுள்ளார். இன்றைய நிகழ்வு அவரை நினைவு கூரவும் அவரது நினைவாக வாழும் கலைஞர்களை வாழ்த்தவும் கௌரவிக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த கௌரவிக்கும் மாண்பு தமிழர்களுடைய பண்பாடாகும். கலைஞர்கள் எம்மை மகிழ்விப்பவர்கள் எமது பண்பாட்டை மேம்படுத்துபவர்கள். புதிய கலை வடிவங்களை உருவாக்குபவர்கள் அவர்களை வாழ்த்துவதும் பாராட்டுவதும் எங்கள் கடமையாகும் என்றார்.
2 விமர்சனங்கள்:
அமரர்.ஏ.ரி.பொன்னுத்துரை அவர்களின் மறைவு தினம் பற்றி அறியத் தரமுடியுமா?
நட்புடன்,
முல்லைஅமுதன்
திரு முல்லை அமுதன், தங்கள் வரவுக்கு நன்றிகள். ஏ.ரி.பொன்னுத்துரை ஐயாவின் மகனுக்கு இது குறித்து முகநூலில் செய்தி அனுப்பி இருக்கெறேன் தகவல் கிடைத்தத்ம் பதிவேன்
Post a Comment